தமிழ் சினிமா

பிச்சை எடுத்தாலும் உள்ளூர்ல பிச்சை எடுக்கக் கூடாது… செத்தாலும் வெளியூர்ல சாககூடாது… ரஜினிகாந்த் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது..!!

இன்று தமிழ் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள பல மக்களை தன் காந்த சக்தியால் கட்டி போட்டு வைத்திருக்கும் அந்த மந்திரச் சொல் தான் “ரஜினி”

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறக்கட்டளை அண்மையில் அதனது பொன் விழாவை கொண்டாடியது.

சிகாகோவில் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

நடிகர் ரஜினிகாந்த் அங்கு நேரில் செல்ல முடியாத நிலையில், காணொளி வாயிலாக அங்கு கூடியிருந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில், அவர் உரையாற்றினார். அப்போது பேசும் பொழுது, “அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளை மூலமாக நடைபெற்று வரும் பணிகளுக்கு, முதலில் என்னுடைய பாராட்டுகள். 2047 -ம் ஆண்டுக்குள் இந்தியா நிச்சயமாக வல்லரசாக மாறும். இந்தியாவின் மூளை டெல்லி என்றால், இந்தியாவின் இதயம் மும்பை என்று நாம் எடுத்துக்கொள்ளலாம்.

அரசியல் தலைநகரமாக டெல்லி விளங்கும் நிலையில் வணிகத்தின் தலைநகரமாக மும்பை விளங்குகிறது. எனக்கு மும்பையில் தொழிலதிபர் அம்பானி முதல் டாடா வரை என பல தொழிலதிபர்களுடன் நெருக்கமாக பழகி, ஒன்றாக உணவருந்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதே போல, டெல்லியில் முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் முதல் இப்போதைய பிரதமர் மோடி வரை என அனைவரிடம் ஒன்றாக அமர்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அவர்களிடத்தில் நான் ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனித்தேன். அது என்னவென்றால், அவர்களுடைய உதவியாளர்கள், மேலாளர்கள் உள்ளிட்டோர்களில் 75 சதவீதத்தினர் தமிழர்களாக இருந்தார்கள். எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக அவர்களிடமே நான் கேட்டேன். அப்போது அவர்கள் தமிழர்கள் புத்திசாலிகள், நன்றாக உழைப்பவர்கள், நன்றி குணம் உடையவர்கள், நாணயமாக இருப்பார்கள் என்று கூறினார்கள். அப்படிப்பட்ட குணம் தமிழர்களுடையது. அதனால்தான் அவர்கள் எங்கு சென்றாலும், சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

அடுத்த 10, 15 வருடங்களில் இந்தியாவின் பொருளாதாரம் நிச்சயமாக வெகு உயரம் செல்ல போகிறது. நீங்கள் இப்போது அங்கு இருக்கிறீர்கள். உங்களுக்கு தற்போது 50, 55 வயது இருக்கும். உங்களுடைய மகன்களுக்கு 15, 20 வயது இருக்கும். இன்னும் 10 வருடங்களில் அவர்களுக்கு கல்யாணம் ஆகி விடும். அதன் பின்னர் நீங்கள் அவர்களுடன் இருக்க வேண்டாம். நீங்கள் பிறந்த இடத்தில் இப்போதே நல்ல வீட்டை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் கடமைகளை முடித்த பின்னர் நீங்கள் இங்கே வந்து விடுங்கள்.பழமொழி ஒன்று இருக்கிறது. பிச்சை எடுத்தாலும் உள்ளூரில் பிச்சை எடுக்கக் கூடாது. வெளியூரில்தான் பிச்சை எடுக்க வேண்டும். செத்தாலும் உள்ளூரில்தான் சாக வேண்டும். வெளியூரில் சாகக்கூடாது. ஆகையால் கடைசி காலத்தில், இங்கு வந்து உங்களது பழைய நினைவுகளை அசை போடுங்கள்.” என்று பேசினார்.இப்படி ரஜினி பேசியது தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

Related Articles

  • Be the first to comment

Back to top button